நாளைய இயக்குநரில் ‘குட்டி தாதா’ தந்தவரின் முதல் படமாக ‘குடிமகான்.’

நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். என் இயக்கும் முதல் படம் ‘குடிமகான்.’
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இதுவரை தனித்தனி நபர்களாகத்தான் சினிமாவில் நுழைந்து தங்களை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் முதன்முறையாக நாளைய இயக்குனர் சீசன் 6 ரன்னர் அப்பின் மொத்த டீமும் குடிமகான் படத்தில் இணைந்திருப்பதுதான் ஹைலைட்.
விஜய் சிவன் அறிமுகக் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘பிக்பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மட்டுமல்லாது நாளைய இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர்.
வழக்கமாக குறும்பட இயக்குநர்கள் சினிமாவுக்குள் நுழையும்போது தாங்கள் இயக்கி வெற்றிபெற்ற குறும்படங்களையே முழுநீள திரைப்படமாக உருவாக்குவது வழக்கம். அதேபோல் இயக்குனர் பிரகாஷும் தனது ‘குட்டி தாதா’ குறும்படத்தையே திரைப்படமாக எடுக்கலாம் என முயற்சித்தபோது அதன் பட்ஜெட் பெரிய அளவில் இருந்ததால் முதலில் இந்த குடிமகான் படத்தை எடுப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்து களமிறங்கியுள்ளார்.படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குடும்பப் பாங்கான படமாக இந்த படம் உருவாகியுள்ளது. குடியை பற்றிய படம் என்றாலும் அதை தவறாக புரமோட் பண்ணும் விதமாக இருக்காது. இந்த நாட்டின் பிரஜையையும் குடிமகன் என்று சொல்வார்கள்.. குடிப்பவர்களையும் குடிமகன் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி ஒரு குடிமகன், ‘குடிமகானாக’ இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கோணத்தில் இந்த கதை உருவாகியுள்ளது” என்றார்.
இந்தப்படத்தின் இசையமைப்பாளர் தனுஜ் மேனன் இயக்குனர் பிரகாஷின் 27 வருட நண்பர். அவரது குறும்படங்கள் அனைத்திற்கும் இசையமைத்துள்ள இவர், ஏற்கனவே சினிமாவில் நுழைந்து சஞ்சீவன் என்கிற படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு செய்துள்ள மெய்யேந்திரன், இதற்குமுன் கேடி என்ற கருப்புதுரை, சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் இந்தி ரீமேக்கிலும் தற்போது பணியாற்றி முடித்துள்ளார்.
படத்தொகுப்பை சிபு நீல் பி.ஆர் மேற்கொண்டுள்ளார்.
விஜய் டிவி’ மணிசந்திரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
படத்தின் காட்சிகளுக்காக பல அரங்குகள் அமைக்கப்பட்டு சென்னையிலேயே கிட்டத்தட்ட 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.குடியரசு தினமான ஜனவரி 26 அன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ், க/பெ ரணசிங்கம் இயக்குநர் விருமாண்டி, அடங்காதே மற்றும் டீசல் படங்களின் இயக்குநர் சண்முகம், ‘விலங்கு’ வெப்சீரீஸ் இயக்குநர் பிரசாந்த் மற்றும் ட்விட்டர் இணையதளத்தில் நடிகர் நகுல், இயக்குநர் பொன்ராம் ஆகியோர் வெளியிட்டனர்.
