நடிகர்களே இல்லாத உலகின் முதல் படம். ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ இயக்குநர் செய்யப்போகும் சாதனை!

‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கிய பட்டாபிராமன் (விபிஆர்) இப்போது இயக்கும் படத்தில் நடிகர்களே இல்லை இல்லை என்பது முக்கிய செய்தி. உலகளவில் இது புதிய முயற்சி!
குறும்படப் பின்னணியில் இருந்து வந்த விபிஆர் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. இவர் முன்பு இயக்கிய ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்றது.
தனது புதிய படத்தின் கதைக்களம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்றும் புதிய முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்த இயக்குநர்,
“இப்படத்தின் கதைக்கு நடிகர்கள் தேவையில்லை, காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை மட்டுமே பார்வையாளர்களை ஈர்க்கப் போதுமானதாக இருக்கும். அனைவரையும் ரசிக்க வைக்கும் நோக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தத் திரைப்படத்தைக் கண்டு ரசிக்கலாம். 2023 கோடை விடுமுறைக் காலத்தில் இந்தத் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
முதலில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இடம்பெறும்படி ஒரு படம் இயக்க நினைத்தேன். ஆனால் பார்த்திபன் ஏற்கெனவே அதை செய்துவிட்டதால், நடிகர்கள் இல்லாமல் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. புதிய படத்திற்கு, திரையில் நடிகர்கள் இல்லாவிட்டாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் திரைக்கதை எழுதியுள்ளேன். இந்தப் படம் கின்னஸ் சாதனை மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டுக்கான முயற்சியாகவும் இருக்கும்” என்றார்.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது. எஸ் பயாஸ்கோப் புரொடக்ஷன்ஸ் சார்பாக பட்டாபிராமனே படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை ரெமி ஸ்டுடியோ மேற்கொள்ளவுள்ளது.
விபிஆர் படத்தொகுப்பாளராகவும் பங்களிக்க உள்ள இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைக்க, விஜய் திருமூலம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் தேவராஜ் இந்த படத்திற்குக் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.