ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் திளைத்த பாட்ரிஷியன் கல்லூரி… உன்னத் பாரத் அபியான் உட்பட பல புதிய வசதிகள் துவக்கம்!

பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை அடையாறில் அமைந்துள்ளது. அக் கல்லூரியின் 21 ஆம் ஆண்டு விழா ஆகஸ்ட் 12 -ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழா கணக்காளர் திரு. மார்ட்டின் பீட்டர் அவர்களின் பிராத்தனையுடன் தொடங்கியது. தொடர்ந்து கல்லூரியின் இயக்குநரும், செயலாளருமான அருட்சகோதரர் முனைவர் அ. ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நடந்தது.
கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போதைய வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசியருமான திரு. டேனியல் பெலிக்ஸ் சாக் அவர்களால் பாட்ரிஷியன் கல்லூரி இதழ் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அவர் இக்கல்லூரியில் படித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய, உள்கட்டமைப்பு நிபுணர் (infrastructure specialist) திரு. ந. முத்துக்குமரன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum Of Understanding) அறிமுகம் செய்து வைத்தார்.
அவருக்குப் பின் ACL டிஜிட்டல் நிறுவனத்தில் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் HRBP பொறுப்பில் பணிபுரியும் செல்வி. அனிதா நான்சி அவர்கள் 2022 – 2023-ம் கல்வியாண்டிற்கான நேர்மறை, விடாமுயற்சி, முன்னேற்றம் என்னும் கருப்பொருளை (theme) வெளியிட்டார். அப்போது பேசிய அவர் ஆசை, அர்ப்பணிப்பு, வளர்ச்சி என்பதைக் கடைப்பிடித்து வாழ்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதன்பின் YUBI நிறுவனத்தின் மனித வள இயக்குநர் (HR Director) திரு. ரமேஷ்குமார், பாட்ரிஷியன் தரவு மையம், கணினி அறிவியல் கருத்தரங்கு மையம், பாட்ரிஷியன் உடல், மனம், ஆன்மா இணக்க அரங்கம், உன்னத் பாரத் அபியான், பாட்ரிஷியன் பழச்சாறகம், தொடர்பு பலகை (Interactive Boards) எனப் பல புதிய வசதிகளைத் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை அனுபவங்களையும், தான் சந்தித்த சவால்களையும் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பாட்ரிஷியன் கல்வி இயக்குநர் முனைவர். பாத்திமா வசந்த், பாட்ரிஷியன் விருதுகளையும் அங்கீகாரத்தையும் வெளியிட்டார். அதன்பின், கல்லூரி முதல்வர் முனைவர் உஷா ஜார்ஜ் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
மாணவர்கள் கல்லூரி கீதம் பாட, ஆண்டு விழா நிறைவடைந்தது.