உங்கள் அன்பால் மீசை தானாகவே முறுக்குகிறது! ‘கோப்ரா’ படக்குழு சந்திப்பில் மதுரை ரசிகர்களிடம் நடிகர் விக்ரம் பேச்சு

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படக்குழுவினர் 23.8.2022 செவ்வாயன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களைச் சந்தித்தனர்.
‘மதுர குலுங்க குலுங்க’ என்று சொல்லும்படி ‘கோப்ரா’ ஹீரோவுக்கு அப்படியொரு கொண்டாட்டமான வரவேற்பைக் கொடுத்து அசத்திவிட்டனர் மதுரை மக்கள்!
நிகழ்வில், நடிகர் விக்ரம், ‘‘மதுரை வந்தாலே மீசை தானாகவே முறுக்குகிறது. அதற்கு உங்கள் அன்பு தான் காரணம். அஜய் ஞானமுத்து உங்கள் ஊர்க்காரர். அவர் இயக்கியுள்ள படம் இது. அவரால் படவேலைகளால் வர முடியவில்லை. இந்த கல்லூரியில் தான் என் தந்தை படித்தார். மதுரையில் தான் நான் ஹாலிடே கொண்டாடுவேன்.
என் நண்பர்கள் பாலா, அமீர் எல்லாம் இங்கு தான் இருந்துள்ளார்கள். அமீர் மதுரையில் இருந்து ஸ்பெஷலாக உணவுகள் கொண்டு வருவார். இன்று மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன்.
கோப்ரா படம் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். எனக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. உங்களுக்கும் பிடிக்கும். படத்தை எல்லோரும் தியேட்டரில் பாருங்கள். நன்றி” என்றார்.
‘கோப்ரா’ படம் பற்றி…
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் எஸ். லலித்குமார் தயாரித்து, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ‘சீயான்’ விக்ரம், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.