இதயத்தில் பூவை வைப்பது போலிருக்கிறது ‘டாடா.’ அந்த படத்தின் வெற்றியைத் தடுக்காதீர்கள்! -இயக்குநர் பேரரசு வேண்டுகோள்

இயக்குநர் பேரரசு விடுத்துள்ள அறிக்கையில்,
‘இதயத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துகிற, காதுக்குள் சரவெடி சத்தத்தை ஏற்படுத்துகிற திரைப்படங்களின் மத்தியில் உணர்வுபூர்வமான இதயத்தில் பூவை வைப்பது போல் அமைந்திருக்கிறது ‘டாடா.’
இப்போது தரமான படங்கள், முக்கியமாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்கள் வருவது மிக மிக அபூர்வமாக இருக்கிறது. அந்த வரிசையில் வந்த படங்களில் டாடா படமும் ஒன்று.
திரையில் பதிக்கிற உணர்வை அப்படியே நம் மனதில் பதிப்பவன்தான் திறமையான இயக்குநர். அப்படி ஒரு இயக்குநர்தான் ‘டாடா’வை இயக்கிய கணேஷ்.கே.பாபு.
படத்தில் சில குறைகள் இருக்கலாம், விமர்சனத்திற்கு உள்ளாக்கூடிய காட்சிகள் இருக்கலாம். அதை பெரிதுபடுத்தி இந்த படத்தை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.
ஏனென்றால் இந்த மாதிரியான சிறு பட்ஜெட் படங்கள் வெற்றியடையும் போதுதான் திரையுலகம் ஆரோக்கியமான பாதைக்கு செல்லும். இப்படி எப்போதோ வரும் படத்திற்கு நாம் விமர்சனம் என்ற பெயரால் எதிர்ப்புகளை வலுக்கச் செய்தால் மீண்டும் வெறும் வியாபார படங்களுக்குள் திரையுலகம் முடங்கிவிடும். இந்த டாடா படத்தை திரையுலகின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் வரவேற்போம் வாழ்த்துவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
